இஸ்ரேல் விரோதி? 

இஸ்ரேல் உலகுக்கு பரம எதிரியாக இருக்கிறது. இஸ்ரேலின் செயற்பாடுகள் உலகின் போக்குக்கு எதிராக இருக்கிறது எனும் தப்பான அபிப்பிராயத்தை உலகம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இஸ்ரேலின் வரலாறு உலகின் ஆரம்பத்தோடு ஆரம்பமானது என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. 

ஆரம்ப யூத மூதாதையர் ஈசாக்கின் மூலமாக ஆபிரகாமின் சந்ததி விருத்தி அடைகிறது. அப்போதே இறைவன் ஆபிரகாமுக்கும் ஈசாக்கும் ஒரு தேசத்தை வாக்களித்து விடுகிறார். அந்த தேசம் அவர்களுக்கு சொந்தமானது என்பதை அவர்களுக்கு மீண்டும் மீண்டும் அடிக்கடி நினைப்பூட்டி வரலாற்றிலேயே மாபெரும் காரியங்களை இறைவன் செய்து வந்ததை காணக்கூடியதாக இருக்கிறது.

இறைவனுக்கு விருப்பமானவர்களாக இஸ்ரவேலர்கள் இருக்கிற பொழுது அவர்கள் தேசத்தை அடைவதும், இறைவனுக்கு விருப்பமற்ற காரியங்களை செய்கிறபொழுது இஸ்ரவேலர்கள் தேசத்தை விட்டு துரத்தப்படுவதும் மாறி மாறி நடைபெற்று வருகிற ஒன்றாக காணப்பட்டது. 

மத்தேயு 24:32-33 சொல்கிறது: “அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.” அத்தி மரத்தின் இளங் கிளைகளும் இலைகளும் இஸ்ரவேலின் மறுசீரமைப்பைக் குறிக்கின்றன என்பதை கர்த்தரை நம்புகிற பலருக்குத் தெரியும். இஸ்ரவேல் மீட்டெடுக்கப்படும்போது, கர்த்தருடைய நாள் நெருங்கிவிடும், இஸ்ரவேல் மே 14, 1948 இல் மீட்டெடுக்கப்பட்டது. வெளிப்படையாக, கர்த்தருடைய வருகையின் இந்த தீர்க்கதரிசனம் முழுமையாக நிறைவேறியுள்ளது.